
மதுரை: மதிமுக பிரமுகர் இல்லத் திருமணத்தை வைகோவின் மகன் துரை வையாபுரி தலைமையேற்று நடத்தி வைத்திருப்பது அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
மதுரை செல்லூர் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உதவியாளர் பொன்னாங்கனின் சகோதரர் ஜெயக்கொடி இல்லத் திருமண விழாவிற்கு, வைகோவின் மகன் துரை வையாபுரி இன்று நேரில் வந்து கலந்து கொண்டார். மணமக்களுக்கு மங்கல நாண் எடுத்துக் கொடுத்து திருமணத்தையும் அவர் நடத்தி வைத்தார்.
தொடர்ந்து மணமக்களுக்கு திருக்குறள் புத்தகத்தை துரை வையாபுரி அன்பளிப்பாக வழங்கினார். துரை வையாபுரிக்கு மதிமுகவினர் ஆளுயர மாலை அணிவித்ததுடன் வாளையும் பரிசாக வழங்கினர். இத்திருமண விழாவில் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அரசியலில் நுழைவதற்கான முன்னோட்டமாக வைகோவின் வாரிசு, களம் இறக்கப்படுகிறாரா என மதிமுக பிரமுகர்களிடம் கேட்டபோது, இத்திருமணத்திற்கு வைகோ வர இயலாத நிலையில், அவர் சார்பாக அவரது மகன் துரை வையாபுரி வந்துள்ளாரே தவிர, இதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’பாஜகவும் அதிமுகவும் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது'