
மதுரை: பழையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி திருச்சபை சிஎஸ்ஐ பேராயர் செல்லையா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் சிஎஸ்ஐ திருச்சபைக்கு ஏராளமான நிலங்கள், நிறுவனங்கள் உள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகா தாமரைகுளம் கிராமம் அருகே பழையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு திட்டமிட்டது.
இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதால், நீர் தேங்கி ஆற்றுப்படுகை அருகே உள்ள நிலங்களில் விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் முழுவதும் சேதம் அடையும். மேலும் புதிய தடுப்பணை கட்டுவதற்கு முறையாக எவ்வித டெண்டர் அறிவிப்பும் விடப்படவில்லை.
எனவே பழையாற்றின் குறுக்கே கட்டப்படவிருக்கும் புதிய தடுப்பணைக்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை செயலர் பதிலளிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பட்டியலின, பழங்குடியின மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கக் கூடாது - உயர் நீதிமன்றம்